உதய தரிசனம் - புகைப்படங்கள்

Thursday, October 29, 2009



பதினேளுவருடங்களுக்குப் பின்பாக தம்பலகாமத்திலுள்ள எமது வீட்டில் இருந்து தரிசித்த உதயம் உங்கள் பார்வைக்கு.

இறுதியாகவுள்ள மூன்றுபடங்களும் கிண்ணியாவிலுள்ள சிறிய பாலத்தருகில் எடுக்கப்பட்டது.



Share/Save/Bookmark



Read more...

ரொபின் ஹூட் / ROBIN HOOD

Tuesday, October 20, 2009

நீண்டநாளைக்குப் பிறகு Robin of Sherwood தொலைக்காட்சித் தொடரின் ஒருபகுதியைப் பார்க்கக்கிடைத்தது. எப்போதோ கொழும்பு சென்றிருந்தபோது வாங்கிய இறுதட்டை கணிணிக்குள் சுழலவிட்டபோது கூடவே என் ஞாபகங்களும் சுழன்று பின்னோக்கிச் சென்றது.



பாடசாலைக்காலத்தில் மிக உற்சாகம் தந்த தொடரிது. அப்போது அது ரூபவாஹினி தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அனைத்துப் பாடசாலை மாணவர்களதும் கவனத்தை ஈர்த்த தொடரிது. சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும் தன் பக்கமீர்த்த இத்தொடர் பல வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பார்க்குமொன்றாக இருந்தது.


இத்தொடர் ஒளிபரப்பாகும் நாளுக்கு அடுத்தநாள் பாடசாலையின் பெரும் பகுதி நேரத்தை தொடரின் கதை நிறைத்திருக்கும். இப்போது பார்த்தாலும் ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் இத்தொடர் அடக்குமுறை நிறைந்த வாழ்வை பிறந்தது முதல் கொண்டிருந்த எங்களை இலகுவாக ஈர்த்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.


இத்தொடரைப்பார்த்த எந்தவொரு இளம்பருவத்தினரும் தமக்கு கிடைத்ததைக் கொண்டு கத்திச் சண்டையோ அல்லது அம்பு வில் பயன்படுத்தி விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்.


சர்வாதிகாரப் பெருஞ் செல்வந்தர்களின் பணத்தைப்பறித்து அதை ஏழைகளுக்கு வழங்கி வாழ்வு நடத்தியவனின் கதையான ரொபின்
ஹூட் ஆங்கில நாடோடிக் கதைகளின் மூலத்தை அடிப்படையாக்க கொண்டிருக்கிறது. இதனது வரலாற்றுப் பின்னணி சர்ச்சைக்குரியது என்றாலும், அது நடந்தது 16ம் அல்லது 17ம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இக்கதைப்படி ரொபின் ஹூட் வாழ்ந்ததாகக் கருதப்படும் நாட்டின்காம் அரண்மனைக்கு முன்னால் அவர் நினைவாக வைக்கப்பட்டுள்ள சிலை கீழுள்ள படத்தில் உள்ளது.


சாகசங்களுக்கு அப்பால் ரொபின் ஹூட் இன் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் தனித்திறமைகளும், அவர்களுக்கிடையில் இடம்பெறும் காதல், சோகம், நகைச்சுவை , சண்டைகள் என்று எல்லாமே ரசனைக்குரியவை.


80 களில் இங்கிலாந்தில் ஒளிபரப்பாகி மிக வரவேற்ப்பைப் பெற்ற இத்தொடர் இலங்கையிலும் விரும்பிப் பார்க்கப்பட்டது. ரொபின் கூட்டத்தில் இருக்கும் லிட்டில் ஜோன் முதல் நசீர் வரை ஒவ்வொரு பாத்திரமும் இன்றும் மனதில் நிக்கக்கூடியவாறு இத்தொடர் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.


இரக்கமில்லாத அடக்குமுறையாளனான நாட்டின்காம் செரீப் ,அவன் தளபதி கிஸ்பன் என்போருக்கு எதிராக நடக்கும் இப்போராட்டம் பலரது வெளிப்படுத்த முடியாத எண்ணக்கிடக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இத்தொடர் விரைவில் உலகம் முழுவதும் பிரபலமானது.


Share/Save/Bookmark





Read more...

திருகோணமலை / இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

Monday, October 12, 2009





தொடர்கிறது....


90 இன் இறுதிப்பகுதியில் உயிர்ப்பயம் காரணமாக என்னுடன் எனது கல்விக்கான தேடலும் திருகோணமலை நோக்கி இடம்பெயர்ந்தது.


கிராமத்தில் இருந்து வந்த என்னை நகரத்துக்கேயுரிய பல ஆச்சரியங்களோடு அரவணைத்துக்கொண்டது கோணேஸ்வரா வித்தியாலயம். உறவுகளைப்பிரிந்து வந்துபடித்த எனக்கு சில நாட்களுக்குள்ளாகவே ஒருகுடும்பத்தின் அரவணைப்பைத் தந்தது அந்தப் பாடசாலை.அப்போது ஒருசுவர் இடைவெளியில் சகோதரப் பாடசாலையாக இந்துக்கல்லூரி இயங்கிக்கொண்டிருந்தது.


வாழ்வின் சுமைகள் தெரியாத வயதின் மிகச் சுறுசுறுப்பான காலப்பகுதியது. மாவட்டரீதியான போட்டிப் பரீட்சைகள் , தமிழ்த்தினப்போட்டி , விளையாட்டுப்போட்டிகள் , BAND இசை நிகழ்ச்சிகள் , சாரணர் அமைப்பு , கலை ,இலக்கிய ,சமய நிகழ்வுகள் எனப்பலதரப்பட்ட வழிகளூக்கூடாக எங்களைப் பண்படுத்தியது எமது பாடசாலை.


1993 ஆம் ஆண்டு எமது பாடசாலையும், சகோதரப் பாடசாலையான இந்துக்கல்லூரியும் இணைந்து இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி எனும் பெயரில் தேசியப்பாடசாலையானது. இதன்மூலம் திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது தேசிய பாடசாலையாக எமது பாடசாலை தரமுயர்ந்தது.


கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் வாழ்வின் பலபாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது இங்குதான். திருகோணமலை வாழ்த்தமிழர்களின் வாழ்வியல், சமயவிடையங்களுக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கியதோடல்லாமல் நிறைய சாதனையாளர்களையும் சமூகத்துக்குத் தந்தது இந்தக் கல்விநிறுவனம்.


கல்வி, விளையாட்டு ,கலைவிழாக்கள் ,சமயநிகழ்வுகள் மற்றும் பல கல்விசாரா நிகழ்வுகளில் சிறப்புறச் செயற்பட்ட இக் கல்விக்கூடத்தின் வரலாறு 1897 இல் ஆரம்பிக்கிறது. திருகோணமலையில் வாழ்ந்த சில இந்துப்பெரியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைகள் இந்து தமிழ் ஆண்கள் பாடசாலை, இந்து ஆங்கில ஆண்கள் பாடசாலை என இருபிரிவுகளாக ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருந்தது.


1925 இல் இருபாடசாலைகளும் இராமகிருஷ்ண சங்கத்துக்கு கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்தரின் நேரடி நிர்வாகத்தின்கீழ் துரிதவளர்ச்சியடைந்தது.


அதிபர் ,ஆசிரியர்களது அயராத உழைப்பால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளில் பல இடர்பாடுகளையும் , சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்தும் மாவட்டத்தின் முன்னணிக் கல்வி நிறுவனமாகச் செயற்பட்டுவருகிறது எமதுபாடசாலை.


தேக்கிவைத்திருக்கும் ஞாபகங்கள் அனைத்தையும் எழுத்துருவாக்க முடியாவிட்டாலும், வருடங்கள் பலகடந்து படித்த பாடசாலையின் நினைவுகளை மீட்டுப்பார்க்கையில் சிலிர்ப்பேற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.



குறிப்பு -

திருகோணமலை/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா
இந்துக்கல்லூரி தொடர்பான இணையவழி செயற்பாடுகளுக்கும் ,எண்ணப்பகிர்வுகளுக்குமாக எமது கல்லூரி நண்பர்கள் நட்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

தொடர்புகளுக்கு......

Read more...
Blog Widget by LinkWithin

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP