திருக்கோணேஸ்வரம் - ஆலய தரிசனம் (புகைப்படங்கள் )
Tuesday, November 24, 2009
கோட்டை வாயில் - திருமலை
திருமலைக் கோட்டையில் இருந்து நகரத்தின் தோற்றம்
இராவணன் வெட்டு
போர்த்துக்கேயரால் முன்னைய ஆலயம் இடிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் அதன் கற்தூண்
கருவறை - கோணேசலிங்கம்
தேவசபை - எழுந்தருளி மூர்த்திகள்
சமயகுரவர்கள்
தெட்சண கயிலாயம் எனப்போற்றப்படும் திருக்கோணேச்சரம் இலங்கையின் கிழக்குமாகாணத்திலுள்ள திருகோணமலையில் அமைந்திருக்கிறது.
தோற்றம் -
இவ்வாலயத்தின் தோற்றக்காலத்தை சரியாக நிர்ணயிப்பது கடினமாக இருப்பினும் 1624 இல் கோணேசர் கோவிலை இடித்தழித்த போத்துக்கேய தளபதி ( கொன்ஸ்ரான் ரைண்டீசா ) அவனுடைய அரசனுக்கு அனுப்பிய அறிக்கையின்படி 'மனுராசா /மாணிக்கராசா என்னும் மன்னால் கி.மு 1300 இல் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாக அறியக்கிடைக்கிறது.
உறுதிப்படுத்தப்படாத பல ஆய்வுகளும் , கற்பனைப் புனைவுகளும் ,சமகால நிகழ்வுகளும் ஆலயத்தின் தொன்மைதனை அறிவியல் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தைச் சிட்டி நிர்க்கின்றன.
ஆலய மூர்த்தி - கோணேஸ்வரர்
இறைவி - மாதுமையம்பாள்
தீர்த்தம் - பாபநாசதீர்த்தம்
தலவிருட்சம் - கல்லால்
வரலாற்றுச்சுருக்கம்
இராமாயண காலம் - இராவணனின் வழிபாட்டுத்தலமாக இவ்வாலயம் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாண வைபவமாலை - கி.பி 436 -சோழமன்னன் வரராமதேவனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் ஆலயத்தை புனருத்தானம் செய்தான்.
வாயு புராணம் - கி.பி 5
தேவாரத் திருப்பதிகம் - கி.பி 7 திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம்.
திருக்கோணேச்சரம் கி.பி 1624 இல் போத்துக்கீச தளபதி கொன்ஸ்ரன்டைன் டிசா என்பவனால் கொள்ளையடித்து,இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்வு பற்றி முன்னமே அறிந்துகொண்ட அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும், மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்தனர்.
1963
ம் ஆண்டளவில் இப்போதுள்ள ஆலயம் புதிதாக நிர்மானிக்கப்பட்டது.
விழாக்கள்
சிவராத்திரிவிழா சிறப்பாக ஆனுஷ்டிக்கப்படும்.
நகர்வலம்
சிவராத்திரிக்கு அடுத்த நாள் மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் நகர்வலத்துக்குப் புறப்படுவார். இரவில் நகர்வலம் இடம்பெறும். முதல்நாள் சிவன்கோவிலிலும் , இரண்டாம் நாள் காளிகோவிலிலும் தங்கி மூன்றாம் நாள் ஆலயம் திரும்புவார்.
மகோற்சவம்
பங்குனி உத்தரத்தில் கொடியேறி 18 நாட்களுக்கு மகோற்சவம் நடைபெறும்.
தெப்பத்திருவிழா
சுவாமி தெப்பத்தில் ஆரோகணித்து கோணமலையைச் சுற்றி சமுத்திரத்தில் வலம்வரும் நிகழ்வு இங்கு விசேசமானதாகும்.

