
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 14
பிரபு! போய்விட்டீர்களா பிரபு?, என்று அவன் ஓலமிட்டபோது உண்மையைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாய்விட்டு அலறத் தொடங்கினார்கள். வெகுநேரம் ஆயிற்று அவர்கள் அழுகை நிற்க.
இனி...
தம்பன் கோட்டை அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. கலிங்கவிஜயவாகு மன்னரின் எருதுக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கோட்டைக்கான கொடி அரைக்கம்பத்தில் ஏற்றிவிடப்பட்டது. கொம்பு, குழல், தப்பட்டை, தாரை, பறை போன்ற வாத்தியங்கள் சோகமாக ஒலித்துக் கொண்டிருந்தன.
அலங்கரிக்கப்பட்ட முன் மண்டபத்தில் தளபதியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசருக்கு சேதி அனுப்பப்பட்டு பதில் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.
உதயனை, யானை போட்ட கல்லிலிருந்து விடிவதற்கு முன்னமே, தளபதியின் உடலை கோட்டைக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டான் இளஞ்செழியன்.
(கல் நெருக்கக் காட்டுப்பகுதியைத் தற்போதைய அரசுகள் வெடிவைத்து அழித்து குடியேற்றங்களை உருவாக்கி வயல்பூமிகளாக மாற்றிக் கொடுத்திருக்கின்றன. காட்டில் இருந்த உதயனை யானை போட்ட கல் என்று காரணப்பெயராக அழைக்கப்பட்ட பகுதி இப்போதும் வயல்வெளிகளுக்கு மத்தியில் அதே பெயரோடு அறியப்பட்டு கிடக்கிறது