Wednesday, June 17, 2009

காச நோயற்ற உலகு..

(இப்பதிவு காச நோய் - TUBERCULOSIS என்னும் பதிவின் தொடர்ச்சி...)

காசநோய் ஒரு மிகப் பழைய நோயாக இருப்பினும் , அது உலகம் முழுவதும் குறிப்பாக வளர்முக நாடுகளில் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் (அதாவது இரண்டு பில்லியன் மக்கள்) காசநோய்க் கிருமி தொற்றியவர்களாக உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் 2004 ம் ஆண்டிற்கான அறிக்கையின் படி இலங்கையில் காசநோயாளர் மரணவீதம் 1000 பேருக்கு 54 பேர் ஆகும்.

எனவே காரணம் தெரியாத நோய்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளும் நாம், முறையான சிகிச்சை மூலம் பூரணமாக குணப்படுத்தக் கூடிய காசநோய் பற்றி அறிவதும், அதனைத் தடுக்க உதவுவதும் இன்றியமையாதாகிறது.

நாம் என்ன செய்ய வேண்டும் ?

§ BCG தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்.

§ மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும்

§ சன நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.

§ போசாக்குக் குறைபாடு இலகுவில் இந்நோய் தொற்ற வழிவகுக்கும்

§ பசுப்பாலினாற் பரவுங் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பாய்ச்சர் முறையிற் பதனிட்ட பாலை அருந்தவும்


காசநோயாளியின் பொறுப்புக்கள்

· சிகிச்சையை குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து எடுக்க வேண்டும்.

· சிகிச்சை ஆரம்பித்த சில நாட்களிலேயே நோயின் அறிகுறிகள் மறைந்தாலும் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும்.

· சிகிச்சையை போதிய காலத்திற்கு முன்பாக நிறுத்தவோ அல்லது தவிற்பதோ கூடாது.

· சிகிச்சை காலத்தில் ஏற்படும் உடல்நலக் குறைவுகளை உடனே மருத்துரிடம் தெரிவிக்கவும்.

· குறிப்பிட்ட காலங்களில் சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க ஒரு நோயாளி செய்ய வேண்டியவை...

· கண்ட இடங்களில் சளியைத் துப்பக்கூடாது

· இருமும் போது வாயை துணியால் மூடிக்கொள்ளவும்

· சளியை மூடியுள்ள குப்பியில் துப்பி எரித்துவிட வேண்டும்.


நோயாளிகளைக் குணமாக்குதல் ,நோய்த்தொற்றுக்குள்ளானவரைக் கண்டு பிடித்தால் , மேலும் நோய்பரவாமல் பார்த்துக்கொள்ளுதல் என்பன காசநோயற்ற உலகினை உருவாக்குவதற்கான வழிமுறைகளாகும்.


மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள படத்தினைச் சுட்டுங்கள்...




த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிபரத்தின் படி இலங்கையில் 2008ல் 1520 மக்கள் காசநோயினால் இறக்கலாம் எனவும் 15010 மக்கள் காசநோயினால் பீடிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது (Prevalence of TB =79/100, 000, death rate (all forms of TB) =8/100,000, இலங்கையின் மொத்த சனத்தொகை 19 மில்லியன்). இலங்கையில் ஆண்களே அதிகமாக காசநோய்த் தொற்றிற்கு ஆளாகின்றனர் (Male:Female ratio=2.8).
    இலங்கையில் காசநோய்த் தடுப்பு தேசிய திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது (National Programme for Tuberculosis-NTP). 42 அரசினர் வைத்தியசாலைகளிலும் (போதனா வைத்தியசாலைகளுட்பட)ஐந்து இராணுவ வைத்தியசாலைகளிலும் தேசிய காசநோய் தடுப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது.

    உலகெங்கிலும் மீண்டும் தலை தூக்கியுள்ள காசநோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய சவால்களாக குணமாக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளினால் நோயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் (multi-drug-resistant TB), HIV (AIDS) எயிட்ஸ் நோயாளிகளில் காசநோய்த் தொற்றும் உள்ளன.

    இலங்கையில் யுத்தத்தினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் செறிவாகத் தங்க வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் இக்காசநோய்த் தொற்று அபாயம் அதிகம் இருப்பதையும் நாம் கருத்திற் கொள்ளவேண்டும்.

    Source:
    http://www.searo.who.int/LinkFiles/TB_Day_Kit_3Annual_Report.pdf

    ReplyDelete
  2. மிக்கநன்றி தகவல் பகிர்வுக்கு Renuka Srinivasan அவர்களே

    ReplyDelete