திருகோணமலையில் பெரியகுளம் பகுதியில் இருக்கும் வெல்கம் விகாரை என அழைக்கப்படுகின்ற இராஜராஜப் பெரும் பள்ளியில் 11, 12, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 16 தமிழ் அறக்கொடைச் சாசனங்கள் 1929, 1953 ஆண்டுகளில் இடம்பெற்ற தொல்பொருள் ஆய்வுகளின்போது கிடைக்கப்பெற்றன. திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம். வெல்காமம் என்னும் ஊரில் இவ்விகாரை அமைந்திருந்ததால் வெல்காமப்பள்ளி என்றும் அழைக்கப்பட்டது.
