Monday, September 20, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 8




பொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.




இனி...

ரங்கநாயகி குடமுருட்டியாறு வெண்மணற்பரப்பில் கோட்டை வாலிபனுடன் பாடிமகிழ்ந்து விட்டு வீட்டுக்கு வந்தாள். திண்ணையில் இருந்து எங்கோ பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த வைத்திலிங்கம் பிள்ளை மகளிடம் சற்று கடுமையாகவே கேட்டார்.

நான் கேள்விப்படுவதெல்லாம் உண்மையா?

அவளில் தயக்கமோ சுணக்கமோ இருக்கவில்லை.


ஆம் அப்பா! அவர் என் ரசிகர், சங்கீத ஞானமுள்ளவர். ராகங்களை நன்றாகப் பாடவும் செய்கிறார்.

அவர் மறித்தார்.
அவர் ராகம் பாடுவது இருக்கட்டும். அவர் யார் என்றாவது அறிந்து கொண்டாயா?

ஆம் அப்பா. அவர் பக்கத்தில் உள்ள தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவராம். சங்கீதம் கற்றுக் கொள்ளும் ஆசை இருக்கிறது.ராகங்களை சுமாராகப் பாடுகிறார். பெயர்கூட குமரன் என்றும் சொன்னார். உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னார். உங்களை சந்திக்க அனுமதியுண்டா அப்பா?


அவனது பெயரைச் சொல்ல அவள் காட்டிய தயக்கத்தைக் கண்டு தூரத்துப் பார்வையை வெட்டிவிட்டு அவளை உற்று நோக்கினார். அவளது பருவத்து ஞானத்திலும் குழந்தைத்தனம் விட்டுப்போகாததைக் கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டார் வைத்திலிங்கம் பிள்ளை.



வேண்டாம்... வேண்டாம்... அவரை இங்கு அழைத்து வந்து
விடாதே...
அவர் அவசரம் காட்டினார்.

ஊர் ஏதேதோ பேசுகிறது. அந்த வாலிபரைப்பற்றி நீ அறிந்து கொண்டதாகச் சொன்னதில் அரைப்பகுதிதான் உண்மை... அவர் கோட்டையில் சாதாரண வீரரல்லம்மா... அவர்தான் தம்பன் கோட்டைக்கான புதிய தளபதி... பெயரும் வெறும் குமரனல்ல, உதயகுமாரன். எல்லாவற்றையும் விட கலிங்க விஜயபாகு பேரரசரது பட்டத்து தேவியின் மூத்த சகோதரியின் மகன். அரச குலத்தவன்...


அவர் பேசப் பேச அவள் அதிர்ந்து போனாள். ஒரே குழப்பமாக இருந்தது.... அப்பா ஏதோ தவறான விடயத்தை அறிந்திருக்கிறார் என்று எண்ணியவள், அதே குழப்பத்தைக் குரலிலும் காட்டி கோட்டை தளபதியின் பெயர் தம்பன் என்றல்லவா முன்பு எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்றள்.



மகளின் குழப்பத்தைக் கண்டு பரிதாபப்பட்ட அவர் ஆறுதலாகச் சொன்னார். ஆம் அம்மா, மகா வீரரான தளபதி தம்பரை வாத நோய்தாக்கி படுக்கையில் சாய்த்துவிட்டது. நோய் குணமாக வேண்டி தளபதி தன் தாயகமான கேரளம் சென்றிருக்கிறார். சக்கரவர்த்திதான் இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்ததும். அவரே தளபதியின் இடத்திற்கு தன் ராணியின் மூத்தசகோதரியின் மகன் உதயகுமரனை அனுப்பியும் புதிய தளபதியாக பதவியேற்கவும் வைத்திருக்கின்றார்.


புதிய தளபதி கோட்டை பொறுப்பை ஏற்கும் வைபவத்தில் உன் அண்ணாதான் நாதஸ்வரம் வாசித்தான். மனம் விரும்பவில்லைதான் நானும்...... அந்த வைபவத்திற்கு கொஞ்சநேரம் போயிருந்தேன். புதிய தளபதியை நானும் கண்டேன். வெண்புரவி ஏறிவரும் அவரின் தோற்றம் பார்க்க ஆசையாக இருந்தது. அவர்தான் குடமுருட்டியாறு ஆற்றங்கரையில் உன்னைச் சந்திப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாதஸ்வரக்காரரே உங்கள் மகள் நல்ல புளியங்கொம்பைத்தான் பிடித்திருக்கிறாள், என்று அவர்கள் கூறுவது ஓன்றும் மகிழ்ச்சி தரக்கூடியதில்லை.அவளது கண்களை உற்றுப்பார்த்துச் சொன்னார்.

அம்மா நாம் சாதாரண குடிமக்கள். தளபதி உதயகுமரன் அரசகுலத்தவர். எட்ட நினைத்தாலும் கிட்டாத தூரம்.... அரச குலத்தவர் ஒருபோதும் வேறு இனங்களில் பெண் கொள்வதில்லை. அதற்கு இடமுமில்லை என்று நான் அறிவேன்.



அவளில் தெரியும் ஏக்கத்தின் சாயலைக் கண்டு கழிவிரக்கப்பட்ட அவர், நாடுகடத்தப்பட்டு இந்த நாட்டில் ஒரு அந்நியனாக வந்து
இறங்கிய விஜயனுக்கு இந்த நாட்டில் ஏக சக்கரவர்த்தியாகவர பேருதவி நல்கிய இயக்கர் குலக்கொடியான குவேனிக்கு விஜயன் தொடர்பாக பிள்ளைகள் இருந்தும், குவேனியையும் பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு விஜயன் பாண்டிய ராஐகுமாரியை மணந்து கொண்டவரலாற்றையும் கருத்தில் எடுத்து, நீ தெளிவு பெறவேண்டும். நம்முடைய நிலமைக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது மகிழ்ச்சி தரக்கூடியதில்லை. சர்வஐர்க்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்றார்.


இதைவிட மேலான அறிவுரையை அவரால் கூறமுடியாது என்றே அவருக்குப்பட்டது. கவலையின் ரேகைகள் அவர் முகத்தில் கீறல்போட்டு, அவர் வயதை கூட்டிக்காட்டின. அவர் நிலை இப்படியென்றால் அவளோ..குடமுருட்டியாற்றங்கரையில் தன்னைச் சந்தித்தவர் தாசாரண வீரர் அல்ல, அவர்தான் தம்பன் கோட்டைப் புதிய தளபதி, கலிங்க விஜயபாகு சக்கரவர்த்திக்கு நெருங்கிய உறவினர் என்று தந்தை சொல்லக் கேட்கக் கேட்க பேதைமனம் துயரம்....... பயம்... ஏமாற்றம்.... மகிழ்ச்சி... போன்ற உணர்ச்சிகளால் கதிகலங்கிப் போனது.


அவரே கூறியது போல அவர் சாதாரண வீரராக இருந்திருக்கக் கூடாதா? அவரோடு பாடி மகிழ்ந்த இந்தக்காலததுக்குள் என்னென்ன தவறுகள் செய்து அபச்சாரம் தேடிக் கொண்டேனோ....?| இவற்றிற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்வேனோ...? அவரை நெருங்கும் தகுதி எனக்கு உண்டா? என்ற கலக்கமும், பயமும் அதே சமயம் என் மனதைக் கவர்ந்தவர் ஒரு தளபதி, என்று எண்ணும் போது மகிழ்ச்சியும் மாறி மாறி தோன்றி அவளை திக்கு முக்காட வைத்தன. இந்த குழப்ப உணர்வுடன் வீட்டினுள் நுழைந்தவள் நேரே அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தாள்.



அவளது ஒவ்வொரு அசைவையும் அவதானித்தபடி உட்கட்டிலில் இருந்த அவளது அத்தை மீனாட்சி கதவடியில் போய் நின்று ரங்கநாயகி ஏதாவது சாப்பிட்டுவிட்டு படு அம்மா என்று குரல் கொடுத்தாள். நாதஸ்வரக்காரரின் மனைவி இறக்கும் முன்பே கணவனை இழந்த அவரது தங்கை மீனாட்சி, அந்த குடும்பத்திற்கு பேருதவியாக இருந்து வந்தாள். அண்ணியார் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பெல்லாம் அவளே ஏற்றுக்கொண்டிருந்தாள். இதனால்தான் வயது வந்த பெண்ணான ரங்கநாயகி எந்தக்கவலையுமின்றி வீட்டுக்கும், ஆற்றுக்கும் இடையில் மான்குட்டி போல் துள்ளித்திரிய முடிந்தது.



எனக்குப் பசிக்கவில்லை அத்தை



என்னதான் பிரச்சினை இருந்தாலும் வெறும் வயிற்றோடு
படுக்காத பிள்ள. பால் காய்ச்சித் தரமட்டுமா?

பால் குடிச்சால்மட்டும் நித்திரை வந்துவிடுமாக்கும். என்னைச்
சும்மா விட்டுவிடுங்கள் அத்தை.



வயதானபிள்ளையை அப்படி விட்டுவிடலாமா? பொறு நான் பால் காய்ச்சி வருகின்றேன்.


அவள் அப்படி சொன்னபிறகு பாலைக்குடிக்காமல் இருக்கமுடியாது என்று ரங்கநாயகிக்கு தெரியும்.



பொறுத்திருந்து பாலைக்குடித்துவிட்டு படுக்கையில் சரிந்தாள். மனம் ஓய மறுத்தது. இனி என்ன செய்வது. அப்பா சொல்வதைப் பார்த்தால் அவரைத் துணைவராக அடைவது இந்த ஜென்மத்தில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காரியம். அவர் என்னிடம் தன்னைப்பற்றிய உண்மையை மறைத்திருக்கவே கூடாது என்றும் கோபப்படவும் செய்தாள். ஒன்றும் அறியாத என் மனதை குழப்பி... ஏன்? அவர் உண்மையைச் சொல்லியிருந்தால் அவருடைய உறவை அன்றே வெட்டியிருப்பேன் அப்படிச் செய்திருந்தால் அந்த உன்னத புருஷனின் அன்பு எனக்கு கிடைத்திருக்குமா?

யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது? அப்பாவோடு இனிப்பேசி பயனில்லை என்று தெரியும். அவர் சுலபத்தில் முடிவெடுப்பதில்லை. எந்த முடிவையும் மாற்றியதில்லை.


அத்தை ... இதெல்லாம் அவளுக்குச் சரிப்படாது. இனி குடமுருட்டியாற்றை மறந்துவிடவேண்டியதுதான். குடமுருட்டியாற்றுக்கு மட்டுமல்ல வெண்மணற்பரப்பு, வாழைத் தோட்டம், ஏன் வெண்புரவிக்கு கூட கும்பிடு போட்டுவிட வேண்டும். படுக்கையில் புரண்டாள். புரவி என்றதுமே குமரன் நெஞ்சை நிறைத்தான். குடமுருட்டியாற்றுக்கு போகாமல் விடும் உறுதி எனக்கு இருக்கிறதா?

எதற்கும் நாளை கடைசியாக ஒருதடவை அவரைப்பார்த்து பேசிவிட்டு வந்து விடவேண்டும். கிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை எப்போது விடியுமென்றிருந்தது. தொடரும்......





ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

Wednesday, September 15, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 7

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6






இனி...

உண்மையில் ஓரிரண்டு கிழமையிலேயே இருவரும் தயக்கமின்றி பேசிக்கொள்ளத் தலைப்பட்டனர். அபின் உண்டு பழகிய மயில் போல கோட்டைவாலிபன் அவன்தான் உதயகுமரன் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பிற்கு நாளும் வரலானான். ஒரு நாள் ரங்கநாயகி வெண்மணல் பரப்பில் அவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது,

Tuesday, September 14, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6


தம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது........

தொன்மைமிக்க தமிழ்பட்டணத்தில் கலிங்க விஐயபாகு கட்டிய கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த படைகளுக்கு மலையாள வீரனான தம்பன் தளபதியாக இருந்து கிழக்கிலிருந்து வந்த படைகளை முறியடித்து மன்னனின் நோக்கத்தை நிறைவேற்றினார்.



அவனது வீரத்திற்கு அடையாளமாகத் தம்பன் கோட்டை என்று அழைக்கப்பட்ட கோட்டைமீது அந்த இராப்பொழுதில் குமரன் வானை அண்ணாந்து பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். நிர்மலமான வானில் விண்மீன்கள் கண்சிமிட்டி அவனுக்கு உற்சாகம் ஊட்டின. கோட்டைச்சுவரில் சொருகியிருந்த பந்தங்களின் வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்து அவனது கம்பீரத்தை கூட்டிக்காட்டின.


என்னால் தளபதி தம்பன்போல இந்தக் கோட்டையைக் கட்டிக்காக்க முடியுமா? புகழ்பெற்ற அவர் எங்கே... நான் எங்கே...?

அவன் தன்பார்வையை கோட்டைச் சுவர்கள் மீது ஓடவிட்டான். என்னால் முடியுமென்றபடியால்தானே மன்னர் என்னை இங்கு அனுப்பியிருக்கின்றார்?.... சந்தர்ப்பம் வரும்போது திறமையைக் காட்டவேண்டியதுதான்.....ஆனாலும் கேள்விப்படுகின்றதைப் பார்த்தால் கிழக்கிலிருந்து இந்த ஜென்மத்திற்கே மோதல் வராது போலிருக்கிறதே.... தம்பன் தளபதி கிழக்கு எதிரிகளின் முது கெலும்பை உடைத்துவிட்டார் என்றல்லவா கூறுகின்றார்கள்.


உண்மையில் அவர் பெரும் வீரர்தான்... அவரது ஆற்றலுக்கு முன் நான் ஒரு பொருட்டே அல்ல. அவனது சிந்தனை நீண்டு கொண்டே போனது. இத்தனை பெருமைக்குரிய தளபதி நோய்வாய்ப்பட்டார் என்ற செய்தி எல்லோருக்கும் பெருந்துயரத்தை கொடுக்கவே செய்தது.


தம்பன் தளபதி நோய்க்காளானபோது அரச மருத்துவர்கள் அவருக்கு ஓய்வும், சிறந்த மருத்துவ வசதிகளும் தேவை என்றபடியால், அவர் தாயகம் திரும்புவதே சாலவும் சிறந்தது என்று கடுமையான ஆலோசனைகளைக் கூறியிருந்தார்கள். மன்னனும் அப்படிச் செய்வது தனது கடமையென்று தளபதியை தாயகம் அனுப்பிவைத்தார். முதலில் கோட்டையை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ள மறுத்த தளபதி தம்பன், தனக்குப் பிறகு தளபதியாக நியமிக்கப்படுவது யாரென்று அறிந்தபிறகுதான் தாயகம் திரும்ப சம்மதித்தார். தனது சிபாரிசை மன்னர் ஏற்றதையிட்டு அவர் சந்தோஷப்பட்டார்.


உதயகுமரன் சக்கரவர்த்தியின் ராணியின் மூத்தசகோதரி ரத்தினாவதிதேவியின் மகன், போரில் ஆற்றல் மிக்கவன், இளைஞன், நல்லபுத்திசாலி, திறமைசாலி, அவனை விட்டால் தளபதி தம்பனின் இடத்திற்கு வேறு பொருத்தமானவன் கிடைக்கமாட்டான் என்ற உறுதி மன்னனுக்கு இருந்தது.


புதிய தளபதியாக வந்து பொறுப்புக்களைப் பாரம் எடுத்து இரண்டு மூன்று நாட்களில் ஊரை அறிந்துகொள்ள அவன் புரவிப்பயணத்தை மாலை வேளைகளில் மேற்கொள்ள தலைப்பட்டான். இப்படியான ஒரு பயணத்தில்தான் அவன் ரங்கநாயகியை ஆற்றுமணலில் ராகம் பாடிக்கொண்டிருந்த நிலையில் சந்தித்தான்.


அவளது நினைப்பு மனதில் பட்டதுமே அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் அந்தக் கோட்டை, அதன்பொறுப்பு காவல்நின்ற வீரர்கள், முறைக்காவல் அழைப்பொலிகள் எல்லாமே மறந்துபோயின. இதை அவன் உணர்ந்து கொள்ளாமலில்லை மெல்லச்சிரித்துவிட்டு தலையை அசைத்தவன் ரங்கநாயகியின் நினைப்பில் மூழ்கிப்போனான்.


அவளது குரலில்தான் எத்தனை இனிமை. அவள் வாயினின்று புறப்படும் இனிமையான ராக ஆலாபனை உயர்ந்ததா? இல்லை அளவெடுத்து கடைந்தெடுத்தது போன்ற அவயவங்கள் கொண்ட வனப்புமிக்க அவளது சௌந்தர்ய உடழழகு சிறந்ததா? தாமரை மொட்டு முகத்தில் வெட்டிச் செல்லும் வண்டுகள் போன்ற அந்தக் கண்கள், அவளிடம் உள்ள ஆற்றல், அழகு என்ற இரண்டு மேன்மைகளுமே அவனைப் பெரிதும் கவர்ந்தன.


அவனுக்குத் தெரியும், அவன் அவளுக்கு அடிமையாகிவிட்டான். ஆற்றல் மிக்க வீரன் ஒரு சாதாரண பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து விட்டான்! அவள் எனக்கு மனைவியாவாளா? அப்படி அவள்கிடைத்து விட்டால் என்னைப்போல பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது?
தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.


உயிரைத் துச்சமாக எண்ணி போர்க்களத்தில் நுழைந்து வாளைச்சுழற்றி எதிரியைப் பந்தாட அவன் தயங்கியதில்லை. அஞ்சியதில்லை. ஆனாலும் அவளை இழப்பதென்பது அவனுக்கு வாழ்வே இல்லைப்போலிருந்தது. நாளை அல்லது மறுநாளாவது அவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.


தொடரும்......





ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

Monday, September 13, 2010

தம்பன் கோட்டை

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 5






தம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.

கலிங்கத்து விஜயபாகு (
மாகன் )கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.



ஆனால் கலிங்க விஜயவாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.


இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்
(தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.


தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).


இந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயவாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.


தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்தது மில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.


(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.
தொடரும்......




ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

Saturday, September 11, 2010

Friday, September 10, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 5


ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 4

முன் பின் தெரியாத ஒருவன் கேட்டால் நான் எப்படிப் பாடுவதாம்? தனக்குள் பதிலொன்றை உருப்போட்டுப் பார்த்துக் கொண்டாள் ரங்கநாயகி.

ரங்கநாயகிக்கு ஏனோ குடமுருட்டியாற்று வெண்மணல் பரப்புக்குப் போகவேண்டும் என்று ஆசையாக இருந்தது. நிச்சயமாக பாடிப்பழக மட்டும்தான் என்பதல்ல ஒரே காரணம் என்று அவளுக்குத் தெரிந்தது. அதனால் அவள் போனாள். அந்த குதிரை வாலிபனைச் சந்தித்த இடத்தினின்று சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. ஆற்றோரமாகச் செல்லும் சாலையை நோக்கி அவளது பார்வையைக் கண்கள் இழுத்துச் சென்றன, ஏமாற்றமாக இருந்தது.



பாடுவதற்கு மனம் வராத நிலையில் மெல்ல மெல்ல ஆற்றில் இறங்கினாள். பாவாடையைச் சற்று உயர்த்தி நனையாமல் பார்த்துக் கொண்டாள். திடீரென்று நீர்மட்டம் கூடுவதுபோல் தோன்றியது. உடனே ஊரில் கூறப்படும் காரணம் நினைவுக்கு வரவே கரைக்கு ஓடி வந்துவிட்டாள். திரும்பவும் ஆற்றைப்பார்த்தாள் நீர் மட்டம் கூடியதாகத் தெரியவில்லை. வீண் பிரமை என்றவாறு, ஊர்க் கதையை நினைத்துப்பார்த்தாள். அந்த ஆற்றுக்கு குடமுருட்டியாறு என்று பெயர் வந்த கதையது.


காலை வேளையில் ஊர்ப்பெண்கள் தண்ணீர் அள்ளக் குடங்களுடன் ஆற்றுக்கு வந்து கரையில் குடங்களை வைத்து விட்டுப் பல்துலக்கிக் கொண்டும், பராக்குப் பார்த்துக் கொண்டும், ஊர்க்கதைகளை அலசிக் கொண்டும் நிற்கின்றபோது, வினாடிக்கு வினாடி நீர்மட்டம் கூடிக் குறைந்து ஓடும் அந்த ஆறு, அருகிலிருக்கும் குடங்களையும் உருட்டிக்கொண்டோடுமாம். இதனால்தான் குடமுருட்டியாறு என்று பெயர் வந்தது என்று ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள்.


அந்தக்காலகட்டத்தில் பெரிய வாழைத்தோட்டம் இங்கே இருந்திருக்கின்றது. இப்போது வாழைகள் அங்கு இல்லை ஆனாலும் அது வாழைத்தோட்டம் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் குடமுருட்டியாறு வடதிசை திரும்பி பால் துறைக்கடலை நோக்கிப் பாய்கிறது. இந்த ஆற்றுப் பிரதேசம் பதிவான தரைப்பிரதேசமாக இருப்பதால் மாரிவெள்ளம் மணலை வார்த்துச் சென்றுள்ளது.

( தற்போது குடமுருட்டியாறு, மழைக்காலங்களில் நீர்பாயும்
ஓடையாகத் தூர்ந்துபோய் இருக்கிறது.)

ரங்கநாயகி இந்த நினைவினின்றும் விடுபட்டுத் தான் நின்று கொண்டிருக்கும் மணல்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிராகி வளர்ந்து நின்ற மருத மரங்களை கவனித்தாள். நான்கு திசைகளிலும் கிளைபரப்பி விதானம்போல் ஆகாயத்தை மறைத் திருந்ததால் இயற்கை அன்னை சிருஷ்டித்த தூண்களாலான மண்டபம் போலத்தெரிந்தது. ~ஊர் மக்கள் பொழுதுபோக்க எவ்வளவு அழகான இடம்.... அமைதியான இடம் இது என்று நினைத்துக் கொண்டாள்.


உண்மைதான்! இந்த இடத்தை ஒரு உல்லாசமான பொழுது போக்கு இடமாக ஊரவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏனோ அதில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக தம்பலகாமம் தெற்கு நெற் செய்கையாளர்கள்தான் அந்த இடத்தை உணவு உட்கொள்ளும் இடமாகத் தண்ணீர், நிழல் ஆகியவற்றை முன்வைத்து பயன்படுத்துவதுண்டு. அறுவடையான பிறகு அந்தப்பயன்பாடும் இல்லை. அதனால்தான் இந்த இடம் ஏகாந்தமாக மனித சஞ்சாரமில்லாது இருக்கிறது. ஏதோ இதுகூட நமக்கு அனுகூலம்தான்.


ரங்கநாயகி சிந்தனைகளில் இருந்து விடுபட்டாள். அவளுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கம் போல மனதில் பட்டது. தந்தையோடு வந்த முதல் நாளே அவளுக்கு இந்த இடம் பிடித்துப்போய் விட்டது. அந்த மணல் சோலையைக் கண்டதும் என்ன அழகான இடம் என்று அவள் பரவசப்பட்டவள் அல்லவா? அவளுக்கு பாடல்களைத் தனிமையில் பாடிப்பழக இதைவிடச் சிறந்த இடம் இருக்குமா?


திடீரென்று கேட்ட குதிரைக் குழம்பொலி அவளைத் திடுக்கிடப் பண்ணியது. சாலையை நோக்கிய கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. ஒரு கணம்தான்! தனது அவசரம் குறித்துத் தன்னைக் கடிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவளாகத் திரும்பி ஆற்றை நோக்கினாள்.

அந்த வாலிபன் அருகில் வந்து என்ன இன்றைக்குப் பாடவில்லையா? என்று கேட்கும் வரை அவள் திரும்பவில்லை.

அவள் புன்னகைத்தாள்.

நான் உங்கள் ரசிகன்..... நம்புங்கள்

அவள் சிரித்தாள்.

ஏன்? சிரிக்கிறீர்கள்

ஒரு நாள் ரசிகனா?

ஏன் இனி நீங்கள் பாடமாட்டீர்களா?

மனம் சொன்னால் பாடுவேன்

நான் சொன்னால் பாடமாட்டீர்களாக்கும்

முன்பின் தெரியாதவர் சொல்லப்பாடுவது எங்கள்
ஊர்பழக்கமில்லை

அப்பா! பெரிய பழக்கம்தான்

இப்படியாக அந்த வாழைத்தோட்டம் அவர்களது சந்திப்புக்கான தளமாக அமைந்துவிட்டது. நாளாக ஆக ரங்கநாயகியின் மனதில் இருந்த அச்சமும் தயக்கமும் அகன்று விட்டது. அவன் தனக்கொரு பாதுகாவலன் என்பதாக உணரத் தலைப்பட்டாள்.


அவன் அருகில் வந்து பாடச்சொல்லிக் கெஞ்சுவான். அப்படிக் கெஞ்ச வைப்பதில் அவளுக்கொரு ஆனந்தம். அவனது உயர்வான பண்புகளும், நல்ல நடத்தைகளும் அவளை அவன் நம்பத்தகுந்தவன் என்று எண்ணவைத்தன. அவன் வரத் தாமதமாகிவிட்டாலோ என்னவோ? ஏதோ? வென்ற பதைப்பு எழுந்து, என்ன காரணம்? என்று தேடிக் குழம்பியது அவள் உள்ளம்.


அவனும் அவள், தான் கேட்டுக் கொண்டபோது பாடாதது கண்டு சினக்கவில்லை. அவளை விளங்கிக் கொண்டான்.

அந்நியனான நான் அப்படிக்கேட்டதே தவறு என்று சமாதானம் சொல்லிக் கொண்டான். இந்த நிலை கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடித்தது. இப்போதெல்லாம் அவள் அவனை ஏமாற்றவும், சீண்டவும் விரும்பவில்லை. இசைமீது அவனுக்கிருந்த ஆவலை அவன் சொல்லிக்கேட்டு ஏற்றுக்கொண்டு பாடலானாள். அவனும் அவளது இராக ஆலாபனைகளை எத்தனையோ ஆகாக்கள் போட்டு ரசிக்கலானான்.


ஒரு நாள் அவனே சொன்னான். நான் தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவன். பெயர் குமரன். என்னைக் கண்டு அஞ்சத்தேவையில்லை.நான் ஊருக்குப் புதியவன்தான் என்று அவள் கேளாமலே தன்னை வெளிப்படுத்தத் தொடங்கினான்.


முதல் நாள் ஊகம் ஊர்ஜிதமானது. தன் கணிப்பு சரியாக அமைந்தது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இருந்தாலும் அவன் தோரணை எல்லாம் அவன் சாதாரண வீரனல்ல என்ற எச்சரிக்கை உணர்வை அவளுக்கு கொடுக்காமலில்லை. அப்படித் தான் இருந்தாலும் அவ்வாறான ஒருவன் தன்னோடு சமனாகப் பழகி, பேசி, ஏன்? பாடச் சொல்லிக்கேட்டு ... ஒரு பக்கம் எண்ணும்போது பெருமையாகவும் இருந்தது. வேடிக்கை என்னவென்றால் இதுநாள் வரையிலும் அவன் அவள் பெயரைக் கேட்டதேயில்லை. தொடரும்......





ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

Thursday, September 09, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 4



ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 3

வைத்திலிங்கம்பிள்ளை வீட்டு முற்றத்தில் பார்த்துக்கொண்டு நின்றார். வழமையாக அவள் இவ்வளவு தாமதித்து வந்ததில்லை. அவளைப் பற்றி அவருக்குக் கலக்கம் கிடையவே கிடையாது. தாயில்லாப் பிள்ளை என்று அவளைப் பொத்தி வளர்த்து, அவள் பயந்தாங்கொள்ளியாகிவிடக்கூடாது, என்று, துணிச்சலாக உலகை எதிர்நோக்குமளவுக்கு வளர்த்து விட்டவர் அவர். ஆனாலும் ஊர் என்று ஒன்று இருக்கிறதே!



வேகமாக வந்தவள் தந்தை முற்றத்தில் நிற்கக் கண்டாள். தனக்காக அவர் பார்த்து நிற்பது புரிந்தது.

என்னம்மா எங்கே போயிருந்தாய்? இன்னும் சற்றே பொழுது தாமதித்திருந்தால் உன்னைத்தேடி எங்கெல்லாம் அலைந்திருப் பேனோ? என்றார் பிள்ளை ஆதங்கத்துடன்.


என்னப்பாநீங்க! உங்களுக்கு என்னைப் பற்றிப் பயம் வரலாமா? இன்றைக்கு பாடிக்காட்டிய இராகத்தை தனிமையில் பாடிப் பழகிச், சரிபார்க்க நீங்கள் முன்னம் அழைத்துப் போய் காட்டியிருந்த குடமுருட்டியாறு மணல் பரப்புக்குத்தான் போயிருந்தேன். என்னை குடமுருட்டியாறு ஒன்றும் உருட்டிக் கொண்டு போய்விடாது அப்பா.


என்ன! இராகத்தைப் பாடிச் சரிபார்த்தாயா...? அதற்காக, மணல் பரப்புக்கா போனாய்? ... இராகம் சரி வந்ததா? எங்கே பாடு பார்க்கலாம். என்றார் அவள் தந்தை.

அவ்வளவுதான்! அடுத்த கணமே தனது குயில் குரலில் தந்தையின் நாதஸ்வர சுளிவு நெளிவுகளுடன் தனக்கேயுரிய லாவகத்துடன் கரகரப்பிரியா இராகத்தைப் பாட ஆரம்பித்து தொடர்ந்தாள். தாம் பாடிக்காட்டியதிலும் மேலாக மகள் படிப்படியாக இராகத்தை உச்சஸ்தாயியிக்கு ஏற்றிச் செல்வதையும், அதற்கு இசைவாக அவளின் இனிய குரல் தடங்கலின்றி இராக ஆலாபனைக்கு துணை போவதையும் கண்டு பெருமைப்பட்டார்.


அதுமட்டுமல்லாது, அவளது இராக ஆலாபனையிலும், பல்லவி எடுப்பிலும், தான் நாதஸ்வரத்தில் கையாளும் பாணி மிளிர்வதையும் கண்டு குளிர்ந்துபோன பிரபல நாதஸ்வர வித்துவான் வைத்திலிங்கம் பிள்ளை, மீன் குஞ்சுக்கு நீந்தவும் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்று தனக்குள் மகிழ்ந்ததுடன் நில்லாது வாய்விட்டு, ஆகா ... அபூர்வம், அபூர்வம் என்று மகளைப் பாராட்டவும் செய்தார்.


சிறு பராயத்திலே தகப்பனை இழந்துவிட்டார் வைத்திலிங்கம் பிள்ளை. அவர் தாய்மாமன் பரசுராமன் அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று நாதஸ்வர மாமேதை பொன்னுச்சாமி பிள்ளையிடம், பையனின் ஆதரவற்றநிலையைக் கூறி, குரு - சீடன் முறையில் நாதஸ்வரம் கற்க ஏற்பாடு செய்திருந்தார். வைத்திலிங்கம், பக்தியுடன் குருவுக்கும், அவர் பத்தினிக்கும் அவர்களது மனம்குளிர சிருஷைகள், தொண்டுகள் செய்து அவர்களின் பரிபூரண ஆசியுடன் நாதஸ்வரம் கற்று வித்துவானாக ஊர் திரும்பினார்.


ஊர் திரும்பிய அவருக்கு அவரது திறமை, ஈழத்தின் தம்பலகாமத்தில் கோணேஸ்வரர் ஆலயத்தில் சேவகம் புரியும் வாய்ப்பைத் தேடித்தந்தது. நாளடைவில் அவருக்கு நாட்டு வைத்தியரின் அறிமுகம் கிட்டியது. அந்த நாட்களில் பெரும்பாலும் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளைக் கற்றுத் தேர்ந்திருப்பது என்பது சாதாரணம். வைத்தியரும் இதற்கு விதிவிலக்கில்லை. அவருக்கு கர்நாடக இசை கைவந்த கலை. நன்கு பாடுவார். அவரது திறமை வைத்திலிங்கத்தை கவர்ந்தது. அவர் வீட்டுக்குப் போய் இருவருமாக சங்கீதத்தை உருப்போடுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.


வைத்தியருக்கு ஹம்சாம்பிகா என்றொரு மகள். வைத்திலிங்கம் பிள்ளையின் ஆற்றல்களால் கவரப்பட்டு, அவரைக் காதலித்து மணந்து கொண்டாள். ஊரெல்லாம் தம்பதியை மெச்சிப் போற்றுமளவுக்கு அவர்களது வாழ்க்கை இருந்தது. இதோ வள்ளுவனும் வாசுகியும் என்றே சொல்வது வழக்கமாக இருந்தது. தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்தில் ஆனி உத்திர தினத்தில் தொடங்கும் உற்சவ விழாக்களுக்கு உபயக்காரர்கள் போட்டி மனப்பான்மையுடன் இந்தியாவினின்றும், இலங்கையின் யாழ்ப்பாணம் போன்ற பல இடங்களிலிருந்தும் நாதஸ்வரம், பாட்டு, சங்கீதக் கச்சேரி என்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்ணித் தூள் கிளப்பிவிடுவார்கள். சுவாமி எழுந்தருளலுக்கு முன் இரவு பதினொரு மணிக்கு அப்பாலும் நாதஸ்வரக் கச்சேரிகள் தொடரும். அவ்வாறான கச்சேரிகளில் கலந்து கொண்ட வித்துவான்கள் எவரிடமும் தோல்வி காணாத ஒரு வித்துவானாக வைத்திலிங்கம் பிள்ளை புகழ்பரப்பிக் கொண்டிருந்தார். என் வெற்றிக்கெல்லாம் என் கம்சாதான் காரணம் என்று மனைவியின் புகழ்பாடுவார் வைத்திலிங்கம்பிள்ளை.



அவரது வாழ்க்கையின் எதிர்பாராத இழப்பு மின்னாமல் முழங்காமல் அவரைத் தேடிவந்தது. இரண்டொரு நாட்கள்தான் சோர்வாகக் காணப்பட்ட அவரது மனைவி, தந்தை கற்றுக் கொடுத்திருந்த அறிவைக் கொண்டு கசாயம் அது இது என்று குடித்துப் பார்த்து சமாளிக்க முயற்சித்தாள். ஒரு நாள் நெஞ்சடைப் பில் போயே விட்டாள். இடிந்து போனார் வைத்திலிங்கம் பிள்ளை. மனைவியின் பிரிவு அவரை பைத்தியமாக மாற்றியடித்துவிடும்போல் இருந்தது. அவரது நிலை கண்டு ஊரே கலங்கியது. நாதஸ்வரத்தை கிடப்பில் போட்டுவிட்டார். அவருக்குப் பைத்தியம் பிடிக்காமல் தவிர்த்தது அவரது கடைசி மகளான ரங்கநாயகிதான். தந்தைக்கு அப்படியேதும் அவல நிலை வராது தடுக்கும் ஆதாரமாக அவள் இருந்தாள். காலம் அவரை மாற்றும் என்று அவள் நம்பினாள். நாளானபோது அவர் கோயில் சேவையைச் செய்ய தனது மகன் கணபதிப்பிள்ளையை ஏற்பாடு பண்ணிக் கொடுத்துவிட்டு, கடைக்குட்டி ரங்கநாயகியுடன் ஒன்றிக் கொண்டார். நாதஸ்வரத்தை உயிரிலும் மேலாக மதித்தவர் அவர். இப்போதோவென்றால் அதை ஏறிட்டுப் பார்ப்பதே சிரமமாக இருந்தது.



தொடக்கத்தில் தன் தனிமையில் ஆறுதல் தேடிக்கொள்ள குடமுருட்டியாற்று மணல் பரப்புக்குப் போய்வருவார். பிறகு ஓரிரு சந்தர்ப்பங்களில் ரங்கநாயகியையும் அழைத்துச் சென்றிருக்கின்றார். இந்த பயணங்களின் போது மகளுக்கு இராகங்கள் பற்றி எதையாவது சொல்லிக்கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவளது கிரகிக்கும் சக்தி அவரையே அசத்தியது. படிப்படியாக அவளுக்கு இராகங்களைப் பாடிக்காட்டலானார். மனமும் தேறுதல் கண்டது. அவரது பயிற்சிகளால் ரங்கநாயகியும் இசைத்துறைக்குள் படிப்படியாக நுழைந்து கொண்டிருந்தாள்.


பிரபலமான நாதஸ்வர வித்துவானாகப் புகழ் பெற்ற மனிதர் அவர். நாதஸ்வரத்தை அவர் கையிலெடுக்காவிட்டாலென்ன அவரைத் தேடிக்கொண்டு சந்திக்க எப்போதும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். தந்தையிடம் கற்றதை உருப்போட்டுப் பார்க்கத் தனிமையான சூழல் இல்லா நிலையில் அவளாகத் தேடிக் கொண்ட மேடைதான் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பு. அப்படி போயிருந்த வேளையில்தான் ரங்கநாயகி அந்த புரவி வாலிபனைக் கண்டாள்.


தகப்பன் ஆகா... ஆகா... அபூர்வம் என்று பாராட்டியபோது அவளுக்கு ஏனோ குதிரை மீது கம்பீரமாக சென்ற வாலிபனது எண்ணம் தோன்றியது. அந்த வாலிபன் இந்த இராகத்தைப் பாடச் சொல்லிக் கெஞ்சியது நினைவில் தோன்றி உடல்முழுவதும் ஒரு இன்பக் கிளர்ச்சியை ஓடவிட்டது. முன் பின் தெரியாத ஒருவன் கேட்டால் நான் எப்படிப் பாடுவதாம்? தனக்குள் பதிலொன்றை உருப்போட்டுப் பார்த்துக் கொண்டாள் ரங்கநாயகி.
தொடரும்......




ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }

Wednesday, September 08, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 3



தீடீரென்று பாடலை நிறுத்தியவள், வலக்கையை ஊன்றியவாறே திரும்பி ஒலிவந்த திசைநோக்கிப் பார்த்தாள். அவள் கண்கள் படபடவென அடித்துக்கொண்டன. முகத்தில் பூரணமாக வியப்பின் சாயல். அவள் கேட்டதோ குதிரையின் கனைப்பு, அருகில் காண்பதோ ஒரு கம்பீரமான காளை! அவள் பார்வை அவனினின்றும் விடுபட்டு குதிரைக்காகத் தேடியது. அவன் புரிந்து கொண்டான்.~~




மன்னிக்கவேண்டும். தங்கள் பாடலை இடையூறு செய்து குழப்பியது என் குதிரைதான். இதோ... என்றவன், சற்று நகர்ந்து பின்னால் புதரண்டை ஒன்றுமே அறியாததுபோல நின்று கொண்டிருந்த குதிரையைக் காட்டியபோது, அது தன் முன்காலொன்றால் நிலத்தைத் தட்டி தலையை மேலும் கீழும் ஒருமுறை ஆட்டியது.


குதிரையைக் கண்டுவிட்ட திருப்தியில் தன் பார்வையை அவனுக்காகத் திருப்பினாள். வசீகரமான முகம், ராஜகளை சொட்டும் தோற்றம், விஷமம் சொரியும் கண்கள், குறும்புப் பார்வை. அரும்பி மேலுதட்டின் மேலாக கோடிழுத்தது போல வளரும் மீசை - அகன்ற மார்பு, உரமேறிய தோள் தசைகள், அவன் மார்பின் குறுக்காக இருந்த கரங்களின் புடைப்பு அவனது பலத்தை எடுத்துக் காட்டின. நீண்ட கால்கள் மணல்பரப்பில் உறுதியாக நின்ற விதம் - எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காத ஆண்மையின் உருவாக அவன் இருந்தான். அவனை அணுஅணுவாக இரசிக்கும் தன் செயலை அவளால் தடுக்கமுடியவில்லை.


மீண்டும் அவன் கண்களுக்காக, பார்வையைக் கொண்டு சென்றபோதுதான், அவனது விஷமம் நிறைந்த பார்வை தன்னை அவதானிப்பதையும், தன்னை அங்கம் அங்கமாக அலசுவதையும் கண்டு நாணிப்போய், சரேலென எழுந்து நின்றுகொண்டு, வலது கால் பெருவிரலால் மணலில் கிளறிக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஒரு அச்சம் எழவே செய்தது. தனித்த இந்த சூழலில்.. அவள் தலை கவிழ்ந்து நின்றது அவனுக்கு வசதியாகப் போய்விட்டது.

இது பெண்ணா இல்லை தங்கச்
சிலையா என்ற அவனது ஆராய்ச்சி தடையின்றித் தொடர்ந்தது. சங்குக் கழுத்திற்குக் கீழே அடங்காமல் திமிறிக் கொண்டிருந்த அவளது அழகு யாரையும் மயக்கிப் போடும் போல இருந்தது. அவளது கைகளின் மினுக்கம் மேனியெல்லாம் பரவிக் கிடந்தது. கடைந்தெடுத்த சிற்பம் போல அவள்......... நான் சவாரி கிளம்பிய வேளை நல்ல முகூர்த்தம் போலிருக்கிறது, என்று தனக்குள் மெச்சிக் கொண்டான். தனிமையிலிருக்கும் பெண்ணை இப்படி ரசிப்பது பண்பாகாது என்று
தனக்குத்தானே கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தபோதுதான்,அவள் பாடல் நின்றுவிட்ட வெறுமையை அவனால் உணரக்கூடியதாக இருந்தது.


அவள் வாயினின்று புறப்பட்டுக் கொண்டிருந்த இனிய ராக ஆலாபணை திடீரென்று நின்று போனது, மகுடியின் ஓசையால் மயங்கி ஆடிக்கொண்டிருந்த நாகசர்ப்பம் திடீரென குழலோசை நின்றால் எப்படித்தவிக்குமோ, அப்படியொரு தவிப்பில் தன் உள்ளம் இருப்பதை உணர்ந்தான். இதற்கெல்லாம் இந்தப் புரவிதான் காரணம் என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன்,

மன்னிக்கவும் உங்கள் பாட்டைக் குழப்பி விட்டமையைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். பாட்டைத் தொடருங்கள்... நிறுத்தி விட்டீர்களே பாடுங்கள்... எல்லாம் இந்தப் புரவியால் வந்தவினை அவன் அவளது பதற்றத்தை நீக்கமுயல்வது அவளுக்குத் தெரிந்தது.

அவன் காணாதபடி புன்னகைத்துக் கொண்டாள்.
பாடவே மாட்டீர்களா?................. சரி நான் நின்றால் பாட மாட்டீர்கள் போலிருக்கிறது. உங்களைக் குழப்பி விட்டேன் போலிருக்கிறது


அவன் குரலில் இருந்த ஏக்கம் அவளைத் தொட்டது. இல்லை என்று சொல்வது போல் தலையை வெட்டித் தூக்கினாள். மறுகணம் அவனது பார்வையை சந்திக்க வெட்கித் தலை குனிந்து கொண்டாள். அவளது மனவோட்டம் அவனுக்குப் புரிந்தது. திருப்தியாகவும் இருந்தது. அவளைச் சீண்டுமாப்போல,
சரி.. பார்க்கலாமே. நான் போன பிறகு பாடுங்கள். என்றபடி அஸ்வத்தை நோக்கிச் சென்று கடிவாளத்தை கையிலெடுத்துக் கொண்டு, பாய்ந்தேறினான். அவன் நகரத்தொடங்கியது அவளது உணர்வுக்குத் தெரிந்தது தலை நிமிர்ந்தாள்.


இன்றில்லாவிட்டாலும் மீண்டும் உங்கள் இனிய கானத்தை
கேட்கவே செய்வேன், வரட்டுமா?
என்று அவளைப் பார்த்து கூறி
புன்னகைத்துவிட்டு அஸ்வத்தை மேற்குத் திசையால் செலுத்திச் சென்றான். அதுவும் அவன் உள்ளத்தின் துள்ளலுக்கு ஈடுகொடுத்துப் போய்க் கொண்டிருந்தது.


அவன் தன்பார்வையினின்றும், பாதையினின்றும் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றவள், வீட்டுக்குப் போக முனைந்தாள். அவன் பார்வைக்கு மறைந்தாலும், அவன் நினைவில் அகலமாட்டான் போலிருந்தது. அவனது எண்ணம் மனதுக்குள் எழுந்து அலையாடியது. யார் அந்த கம்பீரமான வாலிபன்...? ஊருக்குப் புதியவனாக தென்படுகின்றானே! யாராக இருக்கலாம். குதிரையில் போகும் மிடுக்கையும் ஆளின் தோற்றத்தையும் பார்த்தால், இவன்
தம்பன் கோட்டை வீரர்களின் ஒருவனாக இருக்கலாம் என்று தெரிகிறது.. யாரும் புதிதாக வந்திருக்கலாம்.. என்று ஒரு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டாலும், சிந்தனை அதற்கு இடம் தரவில்லை. ஆள் கவர்ச்சியானவன்தான். இளம் மங்கையர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சுந்தர புருஷன் என்பதில் ஐயமேயில்லை என்று, அவனது ஆனந்த நினைவை நெஞ்சில் சுமந்து கொண்டு நடையை எட்டிப் போட்டாள். தொடரும்......





ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....


{ படங்கள் இணையத்தில் இருந்து }