திருக்கோணமலை புராதன காலம் தொட்டு இன்றுவரை தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தால் எல்லோரையும் கவருகின்ற ஒரு நகராகும். வங்கக்கடலை நோக்கிய “ஆ” என விரிந்த குடாவோடு, நிலத்தின் அருகிலேயே கப்பல்கள் தரிக்கக்கூடிய ஆழத்தோடு திகழும் இந்த இயற்கைத்துறைமுகம் காலங்காலமாக கடலோடிகளை கவர்ந்தே வந்துள்ளது. இதனாலேயே திருக்கோணமலை அக்கால இணையற்ற தமிழ்ப்பேரரசனான இராஜராஜ சோழனது கடாரம், சொர்ணத்தீவு ( இன்றைய இந்தோனேசியா, பாலித்தீவுகள், சுமத்திரா ) போன்ற நாடுகளுக்கான படையெடுப்பிற்கான பிரதான துறைமுகமாகவும், பிற்காலத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியரின் காலனித்துவ கனவுகளுக்கு பிரதான திறவுகோலாகவும், இக்கால அமெரிக்கா முதல் இந்தியா வரையான நாடுகளின் தீராத காதலினால் ஏற்பட்ட பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு அடித்தளமாகவும் விளங்கிவருகின்றது.
