Wednesday, August 01, 2012
ஆதிகோணநாயகர் ஆலய பிரமோட்ஸப அபிஷேகம்
வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ள காரணத்தால் வருடாந்த பிரமோற்ஸபம் இம்முறை இடம் பெறவில்லை.
இதற்குப்பதிலாக பிரம்மோற்ஸப தினத்தை முன்னிட்டு ஆனிமாதம் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 26.06.2012 தொடக்கம் 16.07.2012 திங்கட்கிழமை வரை 21 தினங்களுக்கு காலை 9.00 மணிமுதல் விஷேட அபிஷேக அலங்கார பூசை என்பன நடைபெறவுள்ளது. தேர்த் திருவிழா தின அபிஷேகம் காலையிலும், கொடியிறக்க அபிஷேகம் மாலை 4.00 மணிக்கும் இடம் பெறும்.
Friday, March 25, 2011
Friday, January 21, 2011
Tuesday, October 05, 2010
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் நிறைவுப்பகுதி

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 14
பிரபு! போய்விட்டீர்களா பிரபு?, என்று அவன் ஓலமிட்டபோது உண்மையைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாய்விட்டு அலறத் தொடங்கினார்கள். வெகுநேரம் ஆயிற்று அவர்கள் அழுகை நிற்க.
இனி...
தம்பன் கோட்டை அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. கலிங்கவிஜயவாகு மன்னரின் எருதுக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கோட்டைக்கான கொடி அரைக்கம்பத்தில் ஏற்றிவிடப்பட்டது. கொம்பு, குழல், தப்பட்டை, தாரை, பறை போன்ற வாத்தியங்கள் சோகமாக ஒலித்துக் கொண்டிருந்தன.
அலங்கரிக்கப்பட்ட முன் மண்டபத்தில் தளபதியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசருக்கு சேதி அனுப்பப்பட்டு பதில் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.
உதயனை, யானை போட்ட கல்லிலிருந்து விடிவதற்கு முன்னமே, தளபதியின் உடலை கோட்டைக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டான் இளஞ்செழியன்.
(கல் நெருக்கக் காட்டுப்பகுதியைத் தற்போதைய அரசுகள் வெடிவைத்து அழித்து குடியேற்றங்களை உருவாக்கி வயல்பூமிகளாக மாற்றிக் கொடுத்திருக்கின்றன. காட்டில் இருந்த உதயனை யானை போட்ட கல் என்று காரணப்பெயராக அழைக்கப்பட்ட பகுதி இப்போதும் வயல்வெளிகளுக்கு மத்தியில் அதே பெயரோடு அறியப்பட்டு கிடக்கிறது
)
)
இளஞ்செழியன்தான் முதலில் சுயநினைவுக்கு வந்தவன். உடனடியாக பத்து வீரர்களை சதுர்வேதமங்கலம் நோக்கி அரசரிடம் எப்படியாவது சேதியைச் சொல்லி பதிலைக் கொண்டு வருமாறு பணித்துவிட்டு, இன்னும் பத்துப்பேரை கடும்விரைவில் கோட்டைக்குள் சென்று ஆயத்தங்கள் செய்யுமாறு பணித்து விட்டு, உதயகுமரனின் உடலை நன்கு போர்வையால் சுற்றி குதிரைமேல் கிடத்தி தம்பன் கோட்டை நோக்கி மீதி வீரர்களுடன் விரைந்தான்.
தளபதி பொறுப்பை ஏற்ற சொற்ப காலங்களிலேயே அனைவரது அன்பையும் தன் எளிமையான பண்புகளால் கவர்ந்திழுத்திருந்த தளபதியின் சாவு பற்றி அறிந்ததும் எல்லோரும் வாய்விட்டுக் கதறினர்.
ஊர் மத்தியில் சேதி பரவி சாரி சாரியாக வந்து மரியாதை செலுத்திச் சென்றனர் மக்கள். சோகத்தின் மத்தியிலும் கண்ணீர் தாரையாக வடிந்து நிற்க படைவீரர்கள்மரியாதை அணிவகுத்து நின்றனர்.
ரங்கநாயகி விடிந்ததும் விடியாததுமாக வீட்டு முற்றத்தில் வந்து நின்று கொண்டிருந்தாள்.... அவள் மனம் வெறுமையாகக் கிடந்தது உற்சாகம் உடலிலும் இருக்கவில்லை. அவள் உணர்விலும் இருக்கவில்லை.
தீடீரென்று தடதடவென்று குதிரைக்குளம்பொலி அவர்களது வீட்டுப்பக்கம் வந்து கொண்டிருந்தது. அவர் வருகிறாரோ என்று நினைத்த மாத்திரத்திலே அவள் இதயம் அவனைப் பார்த்துவிட தொண்டைக்குழிவரை வந்துவிட்டது போலிருந்தது. வந்தது உதயகுமரனில்லை. ஒரு போர்வீரன்! செய்தியை இளஞ்செழியன் அனுப்பியிருந்தான்.அவன் சொன்ன சேதியைக் கேட்டதும் அப்பா| என்ற ஒரு அலறல் அவள் அடித்தொண்டையில் இருந்து வந்தது. பிறகு கொஞ்ச நேரம் கோட்டை இருந்த பக்கம் திரும்பி சலனம் ஏதுமின்றி
நின்றவள் அப்படியே மயங்கி வீழ்ந்தாள்.
மதியத்திற்கு முன்னதாக அவளை மயக்கம் தெளியப் பண்ணி அத்தையும், சில பெண்களுமாக கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அவனைக் கடைசித் தடவையாகப் பார்க்க வேண்டும் என்று போராடத் தொடங்கிவிட்ட அவளை,அடக்கவேண்டுமானால் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலை கண்டு அவளை அழைத்து வந்தனர்.
உதயகுமரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நெற்றித் திலகம் அவனது முகத்தின் கவர்ச்சியை தூக்கலாக்கியது. வயிற்றுப்பகுதி சேதத்தை மறைக்கவோ என்னவோ அவனது வாளும் கேடயமும் வைக்கப்பட்டிருந்தன. அவனது உயிரற்ற உடலைக் கண்டதும் அவள் அலறிக் கத்திக்கொண்டு விழுந்து மூர்ச்சையானாள். அவளுக்குள் ஒரு நரம்பு அறுந்தமாதிரி ஒரு உணர்வுடனேயே அவள் நினைவிழந்தாள்.
மாட்டுவண்டி எடுத்துவந்து பிரேதம் போல அவளை வீடு கொண்டு சென்றனர். அவளுக்கு நினைவு தெளிய ஒரு நாளாயிற்று. அதற்கிடையில் உதயகுமரனை அரசரின் ஆக்ஞைப்படி சதுர்வேத மங்கலத்திற்கு மங்கலத்தேரில் வைக்கப்பட்டு எடுத்துக் கொண்டு போகப்பட்டது. தம்பலகாமம் பிரதேசம் அடங்கிலும் ஒரே சோகமயம்தான்.
இதற்கிடையில் மரக்கட்டைபோல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மகளைக் கண்டதும் வைத்திலிங்கம் பிள்ளை சிறு பிள்ளை போல அரற்றத் தொடங்கிவிட்டார். அவரைத் தேற்றுவதே பெரும்பாடாயிற்று.தம்பை நகர் என்ற தம்பலகாமத்து இராஜ வைத்தியர் நமச்சிவாயப் பரியாரியாரின் உயிர் காக்கும் மிர்தி சஞ்சீவி மாத்திரைப் பிரயோகமே அவளைப் பிழைக்கச் செய்தது.ரங்கநாயகி இறந்துவிடுவாள் என்றே பலரும் நம்பினர். ஆயினும் பிழைத்துக் கொண்டாள். கொடிய கருநாக சர்ப்பத்தின் வாயில் அகப்பட்டுத் தப்பிய தேரைபோல சில காலம் ஒடுங்கிக் போயிருந்தாள்.
முன்னாள் தளபதி தம்பருக்கே மருத்துவம் செய்து வித்தைகாட்டிய இராஜாங்க வைத்தியரின் கைராசியால் ரங்கநாயகியும் சற்றுத் தேறலானாள். அவளது சங்கீதத் திறமை, அழகு இரண்டையும் கேள்விப்பட்டு எத்தனையோ பல ஊர்களிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். தன் அருமை மகளைத் தன் கண் மூட முன்னமே ஒரு நல்லவன் கையில் கொடுத்து அவளை ஒப்பேற்றி விடவேண்டும் என்ற நினைவிலேயே இருந்த வைத்திலிங்கம் பிள்ளை வரன்களை வரச்சொல்லி அவளது பதிலைக் கேட்டபோது, ரங்கநாயகி ஒரு தர்பாரே நடத்திவிட்டாள்.
அப்பா என் அன்பர் பயங்கர மரணம் அடைந்த சேதியைக் கேட்டதுமே நான் இறந்திருக்க வேண்டும். பாவி ஏன் உயிரோடு இருக்கிறேனோ தெரியவில்லை. அப்பா... நீங்கள் நான் இருக்கின்ற காலம் வரை இந்த நிம்மதியுடன் இருக்கவிடுவதாக இருந்தால் திருமணம் என்ற பேச்சை என் காது கேட்கச் சொல்லாதீர்களப்பா!
அவள் கேவிக் கேவி அழலானாள். அவரும் அவளுடன் சேர்ந்து அழுதார். இனி அவளிடம் இந்தப் பேச்சை எடுப்பதேயில்லை... அவளாக ஒரு முடிவுக்கு வந்தாலொழிய... நானாக அவளை நெருக்கக் கூடாது என்று அவள் இஷ்டத்திற்கு விட்டுவிட்டார்.
சின்ன வயதிலேயே வெள்ளை உடுத்து விதவைக்கோலம்பூண்ட ரங்கநாயகி, சமயங்களில் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பில் நின்று சத்தமாக ராகங்களை இசைப்பாள். அதை உதயகுமாரன் கேட்கவேண்டும், கேட்டுக்கொண்டிருப்பான் என்ற உணர்வு அவளுக்குள் இருக்கும், அல்லாது போனால் கலிங்கத்து விஜயன் கட்டி கலகக்காரர்களால் அழிக்கப்பட்டுப் பின்னர் குளக்கோட்டன் மன்னனால் கட்டப்பட்ட தம்பலகாமம் கோணேச்வரர் ஆலய தெற்கு வாயிலுக்கு எப்போதாவது வருவாள். உள்ளே எழுந்தருளி இருக்கும் கோணேஸ்வரப் பெருமானை நோக்கி இரு கரங்களையும் சிரசில் கூப்பி
நீர்வளச் சிறப்பும் நிலவளச் சிறப்பும்
நிகரில்லாப் பெருவளம் கொழிக்கும்
ஊரதன் பெயரே தம்பலகாமம்
உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்
சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த
கோயில் குடியிருப்பெனும் பதியில்
கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த
கோண நாயகர் அமர்ந்தாரே
ஊரதன் பெயரே தம்பலகாமம்
உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்
சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த
கோயில் குடியிருப்பெனும் பதியில்
கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த
கோண நாயகர் அமர்ந்தாரே
என்று தன் குயில்க் குரலால் பாடுவாள். அப்போது தானும் உதயகுமரனும் குடமுருட்டியாற்று வெண்மணற்பரப்பில் அமர்ந்து பாடிய நாட்கள் நினைவுக்கு வரும். அவள் கண்கள் இரண்டும் அருவியாய் மாறும்.
முற்றும்..
அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 14

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 13
எதிர்காலம் பற்றியே முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் இது பற்றி என்னமுடிவெடுப்பது?எப்போதாவது போகத்தானே போகிறோம். இப்போது போனால் என்ன? பிறகு போனால் என்ன.
இனி...
பிரயாணம் செய்யும் வழி காட்டுப்பாதையாகவும், இராக்காலமாகவும் இருந்ததால், தளபதிக்கு முன்பும் பின்பும் வீரர்கள் பாதுகாப்பாக வர அணிவகுத்தனர்.
வழமைபோல் உதயகுமரன் அதைவிரும்பவில்லை. தன்னைத் தொடர்ந்து சகலரையும் வருமாறு பணித்துவிட்டு தன் வெண்புரவியிலமர்ந்து அந்தக் காட்டு வழியால் முன்னால் குதிரை மீது போய்க் கொண்டிருந்தான்.
அவன் பணித்ததுபோல குதிரைப் படைவீரர்கள் வந்து கொண்டிருந்தனர். அந்த 18 முழப்பாதையில் வெண்ணிலவு எறித்து ஒரு வெள்ளிப்பாதையாகவே மாறிவிட்டது. ஆயினும் வண்டில் வழிக்கு அண்மித்து கிளைபரப்பி நின்ற பெரு விருட்சங்களின் அடிகளில் இருள் சூழ்ந்து நின்றது. மணல் வழிகளில் குதிரைகள் நடந்துவருவதால் பெரிதாக அரவம் எழவில்லை.
எனினும், குதிரையில் ஆட்கள் வருவதையறிந்த ஆட்காட்டிப் பறவைகள் அடிக்கடி கத்திக் கொண்டு பறந்து சென்றன. பின்னிரவின் ஆரம்பம் அது.... கரடிகளின் உறுமல்கள்.... காட்டு யானைகளின் பிளிறல்கள்.... ஒரு விசித்திரமான பின்னணியைக் கொடுத்துக் கொண்டிருந்தன.
சமயங்களில் புலிகளின் கர்ச்சனைகள் அச்சத்தைக் கொடுத்தன. அதைக்கேட்டு குதிரைகளும் தயங்கின. ஆந்தையின் அலறலோடு கலந்து ஒலித்த நரிகளின் ஊளை ஒலி... மனதுக்குக் கிலி கொடுத்தது. அந்தச் சத்தம் இளஞ்செழியனுக்கு நல்லதாகப் படவில்லை. ஏக்கத்தோடு ஒலிப்பதுபோல் இருந்தது. தொடங்கிவிட்ட பயணத்தை நிறுத்தவும் தளபதி விரும்பமாட்டார். இளஞ்செழியனுக்கு சகுனங்களில் கொஞ்சம் நம்பிக்கையுண்டு.
இதைப் போய் தளபதியிடம் கூறினால்... நரிகளின் சுபாவமே அது... நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்.என்று ஒதுக்கித்தள்ளிவிடுவான். மூன்றாம் ஜாமம் நெருங்கிக் கொண்டிருந்தது. உதயகுமரனின் மனம் பேதலித்துப் போய் இருந்தது.... தனது கவனத்தையும், அவன் உஷாரையும் இழந்து வெகு நேரமாயிற்று.... இடையே ஒருமுறை அவர்களைத் திரும்பிப் பார்த்தான்... அவர்கள் தூக்கக் கலக்கத்தில் சற்றுப் பின்தங்கியே வந்து கொண்டிருந்தனர்.
அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டாலும் குறிப்பான ஒன்றிலும் அது குவிந்திருந்ததாகக் காணோம். வெறுமையாக அவன் முன்னால் பார்த்தபடி சென்று கொண்டிருந்தான். உண்மையில் அவனுக்காக அவன் புரவிதான் நடந்து கொண்டிருந்தது. சிந்தனையோ ரங்கநாயகியிலும், தாயிலும், அரசரிலுமாக மாறிமாறி அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அவர்களுக்கு எதிரேயுள்ள ஒரு காட்டுப் பூமிக்கடியில் ஒரு மலைத்தொடர் உருவாகி, நேர்க்கோடு இழுத்தது போல் பூமிக்குமேல் ஒரு முழம் வரை உயர்ந்தும், சில இடங்களில் பதிந்தும் இருந்தது. இந்த மலைச்சரிவை கல் நெருக்கம் என்றழைத்து வந்தனர். அந்தக் கல் நெருக்கத்தில் ஒரு பாலைமரம் நன்கு கிளைபரப்பி வெட்டப்படாமல் பெரும் மலைபோல் வளர்ந்திருந்தது. அந்தப் பால் நிலவு வேளையிலும் அந்த மரத்தைச் சுற்றிலும் காரிருள் அப்பிக் கிடந்தது. அதன் இருளில் எவர் நின்றாலும் கண்டு கொள்ள முடியாதபடி இருந்தது.
அந்த மரத்தின் கீழ் நின்று, அதன் தாழ்வான கிளையொன்றில் துதிக்கையைப் போட்டபடி கொழுப்பான தனியன் - காட்டுயானை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. உதயகுமரன் அவ்விடத்தை அண்மித்தபோது, ஆள்காட்டிப் பறவை ஒன்று உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு பறந்தது. அதன் ஓசையில் விழித்துவிட்ட தனியன், நிலவு வெளிச்சத்தில் குதிரைமீது அமர்ந்து வரும் உதயகுமரனைக் கண்டது. மெல்ல மரத்தைச் சுற்றி ஒரு அடி முன்வைத்தது.
சரியாகக் குதிரை மரத்தண்டை வந்ததும் வேகமாக முன்நகர்ந்த யானையைக் கண்டு குதிரை கனைப்பதற்குள் பாய்ந்து துதிக்கையை நீட்டி உதயகுமரனை அப்படியே உயரத்தூக்கியது. யானையின் துதிக்கையைத் தன் முகத்திற்கெதிரே கண்டபோதுதான் உதயகுமரன் விழிப்படைந்தான். இயல்பாகவே அவனது கை குறுக்காக ஓடி வாளுக்காக நீண்டபோது காலம் கடந்து விட்டது. ஒரு பிளிறலுடன் அவனை அப்படியே அலக்காகத் தூக்கி அவ்விடத்திலேயே நிலத்தில் அறைந்ததுடன் தன் முன்னங்காலால் அவன் வயிற்றிலும் மிதித்துவிட்டு காட்டின் மறு பக்கம் ஓடி மறைந்தது.

யானையின் பயங்கர பிளிறலைக் கேட்ட வீரர்கள் நித்திரைக்கலக்கத்திலேயே குதிரைகளைத் திருப்பி சிறிது தூரம் ஓடிச் சென்று காட்டுக்குள் மறைந்து கொண்டனர்.
சில மணித்துளிகள்வரை யாரும் சத்தம் எழுப்பவில்லை. அரவம் அடங்கி அமைதி நிலவியது. தமது குதிரைகளைக் கடிவாளத்தில் பிடித்தபடி வாளை உருவிக் கொண்டு முன்னேறினர்.
அப்போதுதான் தளபதியின் வெண்குதிரை தனியே, தனது முன்காலால் தரையைத் தட்டி தலையை மேலும் கீழும் அசைத்தபடி நிற்பதைக் கண்டு கிலேசம் கொண்டனர். குதிரையின் அருகில் ஒருவர் கிடப்பது தெரிந்தது. கடவுளே என்று ஓலமிட்டுக் கொண்டு ஓடிவந்து பார்த்தனர்.
தளபதிதான்... தலையால் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. வயிற்றுப் பகுதி இடுப்புப் பட்டியுடன் சேர்ந்து நசுங்கிக் கிடந்தது.
பிரபோ என்று அலறிய இளஞ்செழியன் குனிந்து சுவாசம் வருகிறதா என்று பார்த்தான்.
பிரபு! போய்விட்டீர்களா பிரபு?, என்று அவன் ஓலமிட்டபோது உண்மையைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாய்விட்டு அலறத் தொடங்கினார்கள். வெகுநேரம் ஆயிற்று அவர்கள் அழுகை நிற்க.தொடரும்......
அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்
{ படங்கள் இணையத்தில் இருந்து }
Friday, October 01, 2010
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 13

இனி...
உதயகுமரன் தனக்காக, தன் பதவி, குடும்பம், உற்றார்உறவினர் ஏன் அவனுக்கு கிடைக்கக்கூடிய எதிர்காலத்தையே உதறித்தள்ள முன்வந்துவிட்டான் என்றால், அவனது அன்பு எவ்வளவு உறுதியானது உண்மையானது என்று எண்ண எண்ண அவன் மனதில் உயர்ந்து கொண்டே போனான்.
அதே நேரம் தானும் அதற்கீடாக சகலதையும் சகலரையும் துறந்து அவனே தஞ்சம் என்று அவன் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொண்டு அவனோடு சென்றுவிடவேண்டியதுதான். அதிலும் அவளுக்கு முடிவெடுக்கச் சிரமமாக இருந்தது.
தன்னை வளர்த்து ஆளாக்கி அறிவூட்டி... தன் கடைசிக் காலத்துக்கென தன்னையே நம்பியிருக்கும் தன் தந்தையை விட்டுச் செல்வது துரோகம் ஆகாதா? யாரோடும் அவளால் இதுபற்றி கலந்து பேச முடியவில்லை. அவளுக்கு நெருங்கிய சினேகிதி என்று யாரும் இருந்ததில்லை. குழப்பம் கூடக் கூட பசி குறைந்தது.
வயிறு வெறுமையாக நித்திரை தொலைந்தது. இதற்கிடையில் நாளை மறுநாள் அவர் என்னைச் சந்திக்கும்போது என்ன கூறப்போகிறாரோ... நான் என்ன சொல்லப்போகிறேனோ? என்ற பதைபதைப்பு அவளுக்குள் உருவாகத் தொடங்கிற்று.
இதுவரைக்கும் தன்னைப்பற்றியோ, தன்வாழ்க்கை எப்படி அமைந்திருக்கவேண்டும் என்பதைப் பற்றியோ கொஞ்சமும் கவலையின்றி திரிந்தவளுக்கு, எல்லாம் அப்பாவுக்கு தெரியும்... அவர் பார்த்துக் கொள்வார்... என்ற முனைப்பில் வாழ்ந்தவளுக்கு... இப்போது எல்லாம் ஒரே சுமையாகத் தெரிந்தது. இதைவிட குடமுருட்டியாற்று பக்கம் போகாமல் இருந்திருக்கலாம்.... அவரைக் காணாமல் இருந்திருக்கலாம்.... இந்த உறவை தொடங்காமலே இருந்திருக்கலாம் என்ற சிந்தனைகூட
களைத்துப்போன அவள் மனதில் இருந்து வந்தது.
களைத்துப்போன அவள் மனதில் இருந்து வந்தது.
கோணேஸ்வரா நான் சிறு பெண். என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நீயே ஒரு வழிகாட்டு. அதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு, அத்தையை துணைக்கு கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போய்வந்தாள்.
சதுர்வேத மங்கலத்தில் படைவீரர்களுக்குள் ஒரு விவாதமே நடந்து கொண்டிருந்தது. நாளை சுட்டெரிக்கும் கோடை வெயில் பயணமா? இன்றேல் இதோ வெண்ணிலவு பகலாய்க் காயும் குளிரான இரவில் புறப்பட்டு தம்பன் கோட்டையில் ஆறுதலாக ஓய்வெடுப்பதா?
இதற்கு தளபதியின் ஒப்புதல் வேண்டுமே, இளஞ்செழியனைப் பார்த்தார்கள். அவனுக்கு தளபதியைக் குழப்ப விருப்பமில்லை. யோசித்தான்....இவர்கள் சொல்வதுபோல் பயணத்தை விரைவுபடுத்தினால், அவரும் அவரது முடிவைப்பற்றி ரங்கநாயகி அம்மையாருடன் சீக்கிரம் பேசி அவரது குழப்பத்திற்கெல்லாம் முடிவு கட்டலாம் அல்லவா?... இளம் பராயத்து நண்பனான அவனுக்கு உதயகுமரன் ரங்கநாயகி பற்றி தன்னுடன் அதிகம்பேசாதது குறித்துக் கொஞ்சம் உள்ளூர மனவருத்தம்தான். இருந்தாலும் அவன் இத்தனை தூரம் கலங்கி நின்றதை அவன் அறியான்.
ஆதலால்.... விரைவில் ஒரு முடிவைக் காண்பது நல்லது என்றே பட்டது. உதயகுமரனை நெருங்கினான். பிரபோ! (என்னதான் நண்பனாக இருந்தாலும் தளபதிக்குரிய மரியாதையை அவன் கொடுக்கத் தயங்கியதில்லை.) முழுநிலவின் வெளிச்சத்தில் பயணப்பட்டு சீக்கிரமே கோட்டையைப் போயடைந்தால் ஆறுதலாக ஓய்வெடுக்கலாம் என்று படையினரின் ஆசையாக இருக்கிறது. தங்கள் முடிவு?என்று இழுத்தான்.
எதிர்காலம் பற்றியே முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் இது பற்றி என்னமுடிவெடுப்பது? எப்போதாவது போகத்தானே போகிறோம். இப்போது போனால் என்ன? பிறகு போனால் என்ன. இருந்தாலும் படைவீரர்களின் நலனில் அவனுக்கு இருந்த அக்கறை அவனுக்கு சரி அவர்களிஷ்டம் போல் புறப்படலாம் ஆயத்தமாகச் சொல் இரவு உணவான பிறகு ஒரு நாழிகையானதும் புறப்படலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டான்.
தொடரும்.....
அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்
{ படங்கள் இணையத்தில் இருந்து }
Subscribe to:
Posts (Atom)


