Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, July 26, 2016

தம்பை போற்றும் தலைமகனாம் தமிழறிஞன் 'பொன் சித்திரவேல்'


தம்பலகாம மக்கள் தம்மை
தன்பா லிழுத்து கல்விதனை
ஓங்கி வளர வழி செய்த
உயர்ந்த மாமனிதரிவர்
தம்பை போற்றும் தலைமகனாம்
தமிழறிஞன் பொன் சித்திரவேல்
எம்மைப் பிரிந்து சென்றனனே!
இதயம் ஏங்கித் துடிக்கிறதே!

Saturday, May 07, 2016

இன்றைய வீரகேசரி (07.05.2016 ) சங்கமம் பகுதியில் எனது நேர்காணல்... நன்றி திரு.சஞ்சீவன்



01.உங்களைப் பற்றியும் உங்களது இலக்கியப்பின்ணணி பற்றியும் கூறமுடியுமா ?

தம்பலகாமத்தில் பிறந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் நான் மருத்துவராகப் பணிபுரிகிறேன். எழுத்தாளராகவும், நீண்டகாலமாக வீரகேசரி நாளிதழின் நிருபராகவும் கடமையாற்றி மறைந்தவர் எனது அப்பப்பா தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள். அவரது தூண்டுதலினால் சிறுவயதில் வாசிப்பதிலும் பின்னர் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. தந்தை கலாபூசணம் வே. தங்கராசா அவர்களின் உறுதுணையுடன் அது இன்றுவரை தொடர்கிறது. பாடசாலைக் காலத்தில் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்த எழுத்துலகப் பயணம் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கிய மலர்கள் என்று நீண்டு செல்கிறது. 

Tuesday, April 19, 2016

கல்விக் கண்களைத் திறந்த மேலோன்! ( காசிநாதர் ஐயா )


தேசிய உடையில் தோன்றி
செந்தமிழ் வளர்த்த கோமான்!
காசிநாதர் ஐயா கல்விக்
கண்களைத் திறந்த மேலோன்!
கிண்ணியாவின் கல்வித் தரத்தை
கீர்த்தியை வளர்த பெருமை
அவரையே சாரும் என்று
அனைவரும் புகழ்ந் துரைப்பர்.

Tuesday, June 03, 2014

தெய்வத்தை வேண்டுகின்றேன்

பெரியோர்கள் செய்கை

பாசத்தில் பிணைப்புண்டிந்த
பாரினில் பிறந்து விட்டேன்
யோசனை பல வாறாக
நொடிக் கொரு ஆவல் தோன்றும்.
ஆசையை அறுத் தெறிந்தால்
அமைதியை அடையலாம் தான்
லேசில்லை அதனைச் செய்தல்
நிம்மதி இழந்தேன் அந்தோ!.

Tuesday, May 27, 2014

அது போதும்

koneswaram

சிற்றம்பலத்தில் நடம் புரியும்
சிவனே உன்றன் திருத் தாள்கள்
பற்றித் தொழுதேன் பயம் நீக்கிப்
பாப இருளைப் போக்கிவிடு.
கற்றைக் குழலில் பிறை சூடிக்
கங்கை மானைத் தரித்தோனே!
முற்றும் துறந்த முனிவர்களும்
முழுதும் உணரார் உன் பெருமை.

Wednesday, August 14, 2013

இயற்கை எழில் நிறைந்த தம்பலகாமம்

Thampalakamam

தம்பலத்தால் கமத்தொழிலை விருத்தி செய்து
தமிழ்க் குடிகள் வாழுகின்ற காரணத்தால்
தம்பலகாமம் என்னும் பெயரைப் பூண்டு எங்கள்
தாயகமாம் உழவர் குலம் தழைத்த நாடு
செம்பவளத் திருமேனி உடையோனான
ஜீவர்களை இரட்சிக்கும் கருணை வள்ளளல்
எம்பெருமான் கோணேசர் கோயில் கொண்டு
இருக்கின்ற திருப்பதியும் இந்த ஊரே.

Saturday, April 20, 2013

இருவரும் ஒருவரானோம்

இருவரும் ஒருவரானோம்

ஆலங்கேணி என்னும்
அழகிய கிராமத்தில்
கோல மயிலான அந்தக்
கோமளத்தைக் கண்டேன்.
வாலைப் பருவம் அவள்
வதனம் அழகின் பிறப்பிடம்
சாலை ஓரத்தில்
சடுதியாச் சந்தித்தேன்.

Wednesday, April 17, 2013

கோணேசர் பிறந்தார் - பகுதி 2

தம்பலகாமம்  ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்



அன்னையின் வழிபாட்டுக் கருந்துணையாய்
அமைய வேண்டும் என்பதற்காய்
தென் கைலை நாதனைப் பெயர்த்தெடுக்க
தென்னவன் இராவணன் முயன்றபோது
வலக்காலைத் தூக்கி மன்னவனை
வதைத்த காட்சிதனை மனத்திற் கொண்டு
வடிவமைத்தார் கோணேசர் திருவுருவை
மகுடாகம முறையையும் சேர்த்துக் கொண்டார்.

கோணேசர் பிறந்தார் - பகுதி 1

தம்பலகாமம்  ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்



ஆதிகோணநாயகர் அவதரித்த
அற்புதம் நிறைந்த வரலாற்றை
ஆதியோடந்தமாய் எடுத்துரைக்க
ஐங்கரன் அருளை வேண்டிப்
பாடுகிறேன் பைந்தமிழர் படித்தறிந்து
பயன்பெற வேண்டும் என்பதினால்
ஏடுகளில் உள்ளவைதான் எனினும் நான்
எளிதாக்கித் தருகிறேன் ஏற்றருள்க.

Thursday, March 07, 2013

சத்தியகாமனின் ஞானோதயம். பகுதி.2

குரு

சத்தியகாமனின் ஞானோதயம். பகுதி.1

சீடனாய்ச் சேர்ந்த காமனுக்குச்
சிறப்புடன் ‘உபநயனம்’ செய்து வைத்து
வித்தைகளைப் பயில்வதற்கு தகுதியான
‘பிரமச் சரியம்’நோற்கின்ற பிராமணனாய்
பெருமை பெறும் சான்றோனாய் ஆக்கிப்
‘பிரம்ம’ உபதேசத்திற்குத் தொடக்கமான
‘பூணூல்’ கல்யாணத்தையும்
பொறுப்பாகச் செய்து வைத்தார்.

Monday, February 25, 2013

தங்கம்

தங்கம்

அத்தை மகள் தங்கமும் அவனும் சேர்ந்து
அன்பாகப் பழகி வந்த நாளில்
சித்திரையில் ஓர்நாள் செய்தியொன்று
செவிகளிலே செந் தீயாய்ப்பாய
செத்னே!என்று தங்கமும்
திசை தெரியா நிலையிலே கனகனும்
பித்தரெனப் ‘பேயறைந்தோர்’ முகத்தோர் போல
பிற றறியா வண்ணம் பிதற்றி நின்றார்

Friday, February 22, 2013

போற்றுதற்குரிய கடவுளாவர்


ஒப்பறேசன் என்றவுடன் உடல் நடுங்கி
ஒடுங்கிப்போய்க் கிடந்தவன் உளந்திருந்தி
துடிப்போ டெழுந்திருந்து துயரைப் போக்கி
சுறுக்காக யாழ்ப்பாணம் சென்று ஆங்கே
எடுப்பாக ‘இருபத்தேழாம் வாட்டில்’ சேர்ந்தேன்
என்னோடு பல நூறு நோயாளர்கள்
‘எதர்க்கும்’ அஞ்சாத மன நிலையில்
இருக்கின்ற காட்சி கண்டு இதயம் நொந்தேன்.

Friday, November 16, 2012

சரித்திரம் படைப்பாய் என்றார்

குரு

சத்திய காமன் என்னும்
சரித்திர புருசன் ஓர் நாள்
விசித்திர மான எண்ணம்
விரைவாக மனதில் தோன்ற
தாயிடம் சென்று அவள்
தாழினைப் பற்றிச் சொல்வான்
அம்மா நான் பிரமம் பற்றி
அறிய நல்லாவல் கொண்டேன்.

Thursday, October 11, 2012

மங்கை உமையாள் ஒருபாக வடிவம் கொண்ட பேரிறைவா!

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்

சிற்றம்பலத்தில் நடம் புரியும்
சிவனே! உன்றன் திருத்தாள்கள்
பற்றித் தொழுதேன் பயம் நீக்கிப்
பாப இருளைப் போக்கி விடு
கற்றைக் குழலில் பிறை சூடிக்
கங்கை மானைத் தரித்தோனே!
முற்றும் துறந்த முனிவர்களும்
முழுதும் அறியார் உன் அருளை.

Friday, October 05, 2012

அவனும் அவளும்

அவனும் ,அவளும்

அவன் பெயர் அமுதன் நல்ல
அழகிய இளங் கலைஞன்
தமிழினில் இனிமை கொஞ்சும்
தரமிக்க கவிதை செய்வோன்!
தம்பை மா நகரம் தந்த
தனித்துவம் மிக்க நல்ல
குடும்பத்தின் இளையோனாக
குதூகலமாக வாழ்வோன்.

Tuesday, August 21, 2012

சதிபதிகள் ஒற்றுமையாய் வாழலானார்

குடும்பம்

திருமணம் செய்து கொண்டால் வாழ்விலுள்ள
சிரமங்கள் குறைந்து விடும் என்று எண்ணி
முருகேசன் வள்ளியம்மை கரம் பிடித்து
முழுசாக ஒரு வருடம் ஆகு முன்பே
தீராத மனக்கவலை சதிபதிக்குள்
சிறு சண்டை சச்சரவு வாக்கு வாதம்
வாராத நாட்களில்லை அக்கம் பக்க
மக்களெலாம் கூடிநின்று புதினம் பார்ப்பார்.

Wednesday, August 08, 2012

பரதவிக்கும் காலம் வரும்!


மண்ணாசை பொன்னாசை மயக்கம் வந்தால்
மனிதனின் பகுத்தறிவு மழுங்கிப் போகும்
எண்ணாத செயல்களையும் எண்ணும் நெஞ்சு
இழிசெயல்கள் புரிவதற்கும் துணிவுண்டாகும்
கண்ணாக தினம்போற்றி மதித்துவந்த
காரியங்கள் அடிசாய்ந்து தலைகீழாகும்
பண்ணாத தவறுகளைச் செய்யத் தூண்டும்
பாபத்தின் அடிசேர்க்கும் பண்பு நீங்கும்

ஆசைகளை வேலியிட்டுத் தடுக்காவிட்டால்
அனர்த்தம் தான்பிறர் சுகத்தைச் சூறையாடும்
யோசனையே மிகுந்துவிடும் மனுப் படைப்பின்
நோக்கங்கள் கெட்டுவிடும் நொந்தவர்க்கு
நேசத்தைக் காட்டியவர்க்;குதவி செய்யும்
நினைவெல்லாம் அகன்றுவிடும் நிஸ்டூரமாய்
பாசமற்று மனுக் குலத்தோர் அரக்கராகிப்
பரதவிக்கும் ஓர் காலம் வந்தேதீரும்.

Sunday, August 05, 2012

நல்லூர் பதியில் உறைகின்ற நாதனே உந்தன் தாள் போற்றி


கல்விச் சிறப்பால் மிக உயர்ந்து
கலைகள் வளரும் யாழ்ப்பாண
நல்லூர்ப் பதியில் உறைகின்ற
ஞானக் கொழுந்தே அடியார்கள்
அல்லல் போக்கி அருள் சுரக்கும்
நல்ல புகழை எடுத்தோத
நாவிற் கருள்வாய் விநாயகனே.

குன்று தோறும் விளையாடும்
குமரா அமரர் குறை தீர்க்க
சென்று அமரர் செருக்கழித்த
செவ்வேள் என்னும் திறலோனே!
மன்றுள் ஆடும் மகாதேவர்
மனதைக் கவரும் பேரழகா
என்று என்றன் துயர் போக்கி
இன்பம் அருள்வாய் இறையோனே.

Thursday, August 02, 2012

எவ்வாறு அமைதி கொள்ளும் ?


அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் 

பைந்தமிழ் மொழியில் வல்ல
பாவலா! தம்பை தந்த
செந்தமிழ் போற்றும் எங்கள்
தீந்தமிழ் கவிஞர் கோனே!
எந்தையே தமிழை உன்றன்
இறையெனப் போற்றி வாழ்ந்த
விந்தையை எண்ணி நாங்கள்

வியப்பினில் ஆழ்வதுண்டு